கோடையிலும் கடல் போல் காட்சி அளிக்கும் புழல் ஏரி
சென்னை:
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான புழல் ஏரி கோடையிலும் நீர் நிரம்பி, கடல் போல் உள்ளதால் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை புழல் ஏரி, 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அதில், 21.20 அடி உயரத்திற்கு, 3.3 டி.எம்.சி., அளவு நீரை, இருப்பு வைக்க முடியும். இந்த ஏரியை சுற்றி செங்குன்றம், புழல், சூரப்பட்டு, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், வெள்ளானூர், எராங்குப்பம், லட்சுமிபுரம், பம்மதுகுளம் உள்ளிட்ட ஊரக, நகர்ப்புற எல்லைகள் உள்ளன.
கடுமையான கோடையில், நீர்நிலைகள் வற்றி வறண்டுவிடும். ஆனால், கடந்த சில ஆண்டாக புழல் ஏரி வற்றாமல், நீர் ஆதாரத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது.தற்போது இந்த ஏரியில், 18 அடி உயரத்திற்கு, 2,650 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.அதில், சென்னை குடிநீருக்காக, வினாடிக்கு, 184 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோடையில், நீர் நிரம்பி உள்ள, புழல் ஏரியை கண்டு ரசிக்கவும், அதன் கரை மீது நடை பயிற்சி செய்யவும், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், ஏரிக்கு வரும், சில விஷம ஜோடிகள், மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்.அவர்களை, ரோந்து பணியில் ஈடுபடும் செங்குன்றம் போலீசார் அகற்ற வேண்டுமென, நடை பயிற்சி செய்வோரும், பொதுமக்களும் கோரி உள்ளனர். https://youtu.be/1geJaIXQ-Bg

